சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு; கடும் அவதியில் நோயாளிகள்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார ஊழியர்களின் தொடர் பணிப்புறக்கணிப்பால் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன வழமை போல இடம்பெற்றாலும் மருந்து வழங்கும் பகுதி மூடப்பட்டிருந்தது. மருந்துகளைப் பெறுவதில் நோயாளர்கள் பாரிய சிரமத்துக்கு முகம் கொடுத்தனர்.
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு நிலையம் என்பன வழமை போல் இயங்குகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை நுவரெலியா மாநகர சபையால் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் பிற்போடப்பட்டுள்ளது.
நேற்று சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததன் காரணமாக பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதற்கமைய மூன்றாவது நாளாக இன்றும் பணி நிறுத்தம் தொடர்கிறது. வேதன உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



