வெளிநாடு சென்றுள்ளாரா துமிந்த சில்வா?
மரண தண்டனைக் கைதியாக இருந்து பொதுமன்னிப்பில் விடுதலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012ஆம் ஆண்டு கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் சக கட்சி உறுப்பினர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் அமைச்சர் பாரத லக்ஸ்மன் கொல்லப்பட்டார். அதில் படுகாயமடைந்த துமிந்த சில்வா தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில மாதங்களுக்கு முன்னர் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தார்.
அதன் பின்னர் அவருக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.
இதேவேளை துமிந்த சில்வாவின் சகோதரர் ரேனோ சில்வா நடத்திவரும் ஊடக வலையமைப்பின் ஊடாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்சவிற்கு பெருமளவு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.