கோட்டா உரை வெறும் குப்பை; சம்பந்தன் காட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை என்றும், அதில் ஒன்றுமே இல்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பெசில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சம்பந்தன் இதனை கூறியுள்ளார். 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ச நேற்று ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின்னர் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,
"ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் கோபம் கொண்டார். பேச்சு முடிந்த கையோடே எழுந்து நாடாளுமன்றில் பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார்.
எனினும், நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டார். ஆனால், நாடாளுமன்றை விட்டு வெளியே வரும்போது முன்னால் எதிர்ப்பட்ட நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் தமது கோபத்தை சம்பந்தன் காட்டினார். '
ஜனாதிபதியின் இந்தப் பேச்சு வெறும் குப்பை. உருப்படியாக இதில் எதுவும் இல்லை. இதைப் போய் அவரிடம் சொல்லுங்கள். நான் தேநீர் உபசாரத்துக்கு வரவில்லை. வந்தால் இதை நானே அவருக்கு நேரடியாகக் கூற வேண்டியிருக்கும். அப்படி வேண்டாம் என்பதற்காகத்தான் தேநீர் உபசாரத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன்.
இந்தப் பேச்சு வெறும் குப்பை தவிர வேறு எதுவுமில்லை என்பதை நான் கூறினேன் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள் எனவும் சபந்தன் கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.
அதோடு ஜனாதிபதியின் உரையில் எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்சினை குறித்து ஏதும் இந்தப் பேச்சில் சொல்லப்படவில்லை. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உங்களுக்கு எதுவும் சரிப்பட்டு வராது என்றும் சம்பந்தன் ஐயா சீற்றத்துடன் கூறினார்.
இந்த நிலையில் சம்பந்தரின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பெசில் ராஜபக்ச ஒருவாறு சமாளித்து அங்கிருந்து அகன்றதாகவும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.