பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 10 வருடங்களுக்கான முதல் சம்பளம்!
கடந்த ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 10 வருடங்களுக்கான முதல் சம்பளத்தை பாகிஸ்தான் நிறுவனம் வழங்கியுள்ளது.
அதன்படி ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் முதல் சம்பளமான 1,667 அமெரிக்க டொலர் இலங்கையில் உள்ள பிரியந்த குமாரவின் மனைவியின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமரின் அரசியல் தொடர்பு சிறப்பு உதவியாளர் டாக்டர் ஷாபாஸ் கில் தெரிவித்தார்.
இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில், 1,667 அமெரிக்க டொலர் முதல் சம்பளத்துடன் 100,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள நிதி, பிரியந்த குமாராவின் மனைவியின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேவேளை சியால்கோட்டில் உள்ள வணிக சமூகம் இறந்தவரின் குடும்பத்திற்காக 100,000 அமெரிக்க டொலர்களை திரட்டியதாகவும், பிரியந்த குமாரவின் சம்பளத்தை அவரது மனைவிக்கு தொடர்ந்தும் அனுப்புவதை உறுதிசெய்துள்ளாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) கூறியுள்ளார்.