யாழில் மீனவர் ஒருவரை மூர்க்கத்தனமான தாக்கிய மர்ம நபர்கள்!
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சிவில் உடையில் வந்த நபர்கள் சிலர் தங்களை பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்தி கொண்டு மீனவர் ஒருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (20-12-2021) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த தாக்குதலில் கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த 34 வயதுடைய ஞானப்பிரகாசம் ராஜ்குமார் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே படுகையாக தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த மீனவர் கடற்றொழிலுக்கு சென்றவேளை கடலில் இந்திய இழுவை படகுகளால் 17 வலைகளை இழந்திருக்கின்றார். அவற்றை தேடியும் கிடைக்காத நிலையில் சில மணிநேரம் காலதாமதமாக பிற்பகல் 2:45 மணியளவில் கரைக்கு திரும்பியுள்ளார்.

இதேவேளை, கரைக்கு திரும்பிய பின்னர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சென்ற சிலர் தங்களை இராணுவ புலானாய்வு பிரிவினர் என அடையாளப்படுத்தி விசாரணை செய்துவட்டு சென்றிருக்கின்றனர்.

இதனையடுத்து மீண்டும் நேற்று (20-12-2021) காலை 11:00 மணியளவில் விசாரணைக்கு வருமாறு குறித்த மீனவர் அழைக்கப்பட்டுள்ளார். இதன்போது வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கை கால்கள் கட்டப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களால் தாக்குதலுக்கு இலக்கான மீனவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.