கிழக்கு மாகாணத்தில் குறைவடையும் மாணவர்களின் வருகை!
கிழக்கில் பெரும்பாலான பாடசாலைகளுக்கு அண்மைக்காலமாக ஆசிரியர் மாணவரின் வரவு குறைந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு சமகால குளிர், பனிக்காலநிலை மற்றும் வேகமாக பரவிவரும் கொரோனா சூழல் போன்றவையே காரணம் என கருதப்படுகின்றது.
இதேவேளை, சமகாலத்தில் ஆசிரியர் மாணவர் மத்தியில் காய்ச்சல் தடிமன் தலைப்பாரம் போன்ற அறிகுறிகள் தென்படுவதோடு ஒருவித உடற்சோர்வும் காணப்படுகிறது. இதனால் அவர்கள் பாடசாலை செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கிழக்கு மாகாண பாடசாலைகள் ஏதாவது மூடப்பட்டுள்ளனவா என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்திடம் வினவியபோது,
இதுவரை அப்படியொரு நிலை ஏற்படவில்லை. எந்தவொரு பாடசாலையும் மூடப்படவில்லை. எனினும் மட்டக்களப்பு கல்முனை போன்ற பிரதேசங்களில் சில பாடசாலைகளில் மாணவருக்கு கொரோனா உறுதிப்பட்டுள்ள காரணத்தினால் குறித்த பாடசாலைகளின் குறித்த வகுப்புகள் மாத்திரம் மூடப்பட்டுள்ளன.
அதேவேளை மாணவர் மற்றும் ஆசிரியர்களின் வரவும் குறைவடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு வக்சீனும் ஏற்றப்பட்டுவருகின்றது.
க.பொ.த.உயர்தரப்பரீட்சையை எதிர்கொண்டுள்ள இன்றைய சூழலில் பெற்றொரும் தம் பிள்ளைகள் மீது கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்றார்.