ஜேர்மனியில் யாழ் நூலக எரிப்பை நினைவுகூர்ந்த புலம்பெயர் தமிழர்கள்!
ஜேர்மனியில் , யூத அழிப்பு நடந்த இடத்தில் யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் குவித்து அழித்த இடத்தில் (Bebelplatz, Berlin ) இந்த கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தமிழ் இளையோர் அமைப்பினரால் இ நிகழ்வில் வைக்கப்பட்ட கண்காட்சியை பல வேற்றின மக்கள் பார்வையிட்டதோடு அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/ நடைபெறும் இனவழிப்பை கண்டித்து தமது கருத்துக்களை பதிவுசெய்ததாகவும் கூறப்படுகின்றது.
அதோடு தமிழ் இளையோர் அமைப்பினரால் மேலதிகமான விளக்கத்தையும் துண்டுப்பிரசுரத்தையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர். இதேவேளை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் திடீர் என பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, புலிக்கொடியை அகற்றும் மாறு கோரியுள்ளனர்.
எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ் உணர்வாளர்கள், பொலிசாருக்கு கொடி சார்ந்து விளக்கம் அளித்தனர். இதனையடுத்து இவ்விடயம் யேர்மன் நாட்டின் பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு பின்னர் கொடியை தொடர்ந்தும் நிகழ்வில் வைத்திருக்கலாம், என கூறிவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.