முல்லைத்தீவில் பல ஆயிரம் ஹெக்டெயர் மக்களின் காணிகளிற்கு ஆபத்து
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் விவசாய மற்றும் பூர்வீக நிலங்களான 7 ஆயிரத்து 92 ஹெக்டெயரை சுவீகரிக்க வன இலாகா திணைக்களம் முயற்சிக்கின்றது.
இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
வன இலாகாத் திணைக்களம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 2749.53 ஹெக்டெயரும் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2275.61 ஹெக்டெயரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில்1764.81ஹெக்டெயரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 530.37 ஹெக்டெயரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 286.74 ஹெக்டெயரும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 14.95 ஹெக்டெயரும்என மொத்தமாக 7091.64 ஹெக்டெயர் மக்களுடைய விவசாய நிலங்களை, அவர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முயற்சி எடுக்கப்படுகின்றது.
இந்த முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டுமென வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.