திருகோணமலை கோணேசர் ஆலயவளாக அறிவித்தல் பலகை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!
திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோணேசர் ஆலய வளாகத்திற்கு உள்நுழையும் வாயிலில் போடப்பட்டிருக்கும் அறிவித்தல் பலகை பேசுபொருளாகியுள்ளது. அதாவது அங்குள்ள பலகையில் இஸ்லாமியர்களின் ஆடையான புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் கோணேசர் ஆலயத்தை வழிபட செல்பவர்களை தாண்டி அந்த வரலாற்றுச் சின்னங்களையும் அதன் இயற்கை வனப்பையும் பார்க்க செல்லும் பல்வேறு மதங்களை பின்பற்றும் பலரும் ஏன் மத நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள் கூட சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
அத்துடன் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தத்தமது மத, கலாச்சார உடைகளை அணிந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இஸ்லாமிய கலாசார ஆடைகளை அணிந்து வருவது மட்டும் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது புரியவில்லை.
இவ்வாறான ஆடைகளை அணிந்து ஆலயத்திற்குள் செல்வதை தடை செய்தால் பரவாயில்லை ஆனால் ஆலய வளாகத்திற்குள் செல்வதையே தடைசெய்வது எந்த விதத்தில் நியாயம்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதே சமயம் போயா தினம் என்பதால் பல பௌத்த மத சகோதரர்கள் தமது கலாச்சார ஆடைகளுடன் வந்திருந்தனர் அவர்கள் ஆலயத்திற்கு உள்ளே போய் வருவதையும் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் நாட்டில் வாழும் மூவின மக்களும் இணைந்து வாழும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இவ்வாறான சிறு விடயங்கள் சமூகங்களுக்கிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தும் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.