பொய்யான தகவலை கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அழகி புஷ்பிகா!
இலங்கை திருமதி அழகிப் போட்டியில் பெரும் சர்ச்சைக்குள்ளான புஷ்பிகா டி சில்வா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
புஷ்பிகா டி சில்வா , கடந்த 15 ஆம் திகதி லொஸ் வேகாஸ் நடைபெற்ற 2021 திருமதி உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ள அமெரிக்கா பயணமானார்.
இப்போட்டியில் அவர் இறுதி ஆறு பேரில் ஒருவராக தெரிவானார். இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷைலின் ஃபோர்ட் முதல் இடத்தை பெற்றதுடன், இரண்டாவது இடத்தை ஜோர்தான் திருமதி அழகியான ஜெக்லைன் ஸ்டெப் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் திருமதி அழகியான டெபான்ஜலி கம்ஸ்ட்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் இலங்கையை பிரதிநித்துவப்படுத்தி இந்தப் போட்டியில் பங்கேற்ற புஷ்பிகா டி சில்வா, தான் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டதாக தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதேசமயம் இலங்கை திருமதி அழகிப் போட்டியில் ஏற்பட்ட சர்சையை தொடர்ந்து, தற்போது புஷ்பிகாவின் பேஸ்புக் பதிவு தொடர்பிலும் பல கருத்துகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் புஷ்பிகா டி சில்வாவின் அந்த பதிவுக்கு கீழே உலக திருமதி அழகி போட்டி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் லிப்பி க்ராஃபோர்ட் கருத்தொன்றை பதிவிட்டார். அதில்,
இந்த போட்டியில் மூன்றாவது, நான்காவது அல்லது வேறு இடங்கள் எதுவும் இல்லை எனவும், வெற்றியாளர் மற்றும் இரண்டாம் இடம் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவை உடனடியாக சரி செய்து அதற்கு பதிலளிக்குமாறும் அவர் புஷ்பிகாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் புஷ்பிகா அதனை கவனத்தில் கொள்ளாத நிலையில், “நீங்கள் உண்மையிலேயே திருமணமானவராக இருந்தால், மேலே உள்ள குறிப்பில் உங்கள் கணவருக்கு ஏன் நன்றி தெரிவிக்க மறந்தீர்கள்? ” என்றும் மீண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புஷ்பிகா டி சில்வாவுடன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு விஜயம் செய்த முன்னாள் திருமதி உலக அழகியும் கொழும்பு மாநகர சபை முதல்வருமான ரோசி சேனாநாயக்க, அவருக்கு வழங்கிய அறிவுரைகள் அடங்கிய ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.