5ஜி நெட்வொர்க் சேவையால் பாரிய சிக்கில்களை சந்திக்கும் விமானங்கள்!
5ஜி நெட்வொர்க் சேவைக்காக ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், 5ஜி நெட்வொர்க் வருகையினால் விமான நிறுவனங்கள் பெரிதும் மகிழ்ச்சியடையவில்லை என்பது போல் தெரிகிறது.
அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது விமானத்தில் உள்ள அல்டிமீட்டர்கள் (உயரமானிகள்) போன்ற கருவிகளில் தலையிடக்கூடும் என்று சமீபத்தில் எச்சரித்தது, இங்கே உயரமானிகள் என்பது தரையில் இருந்து விமானத்தின் உயரத்தை அளவிடும் ஒரு கருவி ஆகும்.
எஃப்ஏஏ-வின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், லுஃப்தான்சா, ஆல் நிப்பான் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான சில விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்தன.
இந்த இடத்தில் அமெரிக்காவுக்கான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ போன்ற 5ஜி நெட்வொர்க்குகள் இயங்கும் முக்கிய இடங்கள் மட்டுமே விமான சேவை சிக்கல்களை சந்திக்கின்றன.
உண்மையிலேயே சில விமான நிறுவனங்கள் 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது விமானத்தில் உள்ள அல்டிமீட்டரில் தலையிடலாம், விமான விபத்துக்கு வழிவகுக்கும் என்று பயப்படுகின்றன.
குறிப்பாக எஃப்ஏஏ-வே எச்சரிக்கை விடுத்துள்ளதால் "ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்?" என்று பின்வாங்கி உள்ளனர்.
இந்த அச்சம், உஷார் நிலை எல்லாம் ஒருபக்கம் இருக்க, விர்ஜின் அட்லாண்டிக், ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் போன்ற பல விமான நிறுவனங்கள் அமெரிக்காவிற்கான எந்த விமானத்தையும் ரத்து செய்யவில்லை.
பின் வாங்கியதை காட்டிக்கொள்ளாத ஏர் இந்தியா ?
5ஜி சார்ந்த பயம் நிலவும் போதும், போயிங் பி777 விமானங்களை இயக்குவதற்கு போயிங் அனுமதி வழங்கிய பிறகு, 6 இந்திய - அமெரிக்க விமானங்களை மீண்டும் தொடங்கியதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
வட அமெரிக்காவில் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தப்படுவதால், இந்திய - அமெரிக்க வழித்தடங்களில் எட்டு விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்ததை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது.
அமெரிக்காவில் அறிமுகமான 5ஜி-க்கு மற்ற ஏர்லைன்கள் ஏன் பயப்படுகிறது?
எல்லாவற்றிற்கும் காரணம் அதிர்வெண் (Frequency) தான். உயரமானிகள் இயங்கும் அதிர்வெண் வரம்பு 4.2 - 4.4 GHz ஆகும். பிரச்சனை என்னவென்றால், 5G அதிர்வெண்கள் இந்த வரம்பிற்கு அருகில் இருப்பதால் குறுக்கீடுகள் ஏற்படலாம்.
5ஜி-யின் குறுக்கீடு ஏற்பட்டால் என்ன நடக்கும்?
எஃப்ஏஏ-வின் கூற்றுப்படி, "ரேடியோ அல்டிமீட்டர்கள் ஆனது வயர்லெஸ் பிராட்பேண்ட் செயல்பாடுகளின் வழியாக குறுக்கீடுகளை சந்தித்தால், அல்டிமீட்டர்களின் வேலை என்னவோ அதை நாம் நம்பியிருக்க முடியாது. இது நிலையான இறக்கை கொண்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கும் பொருந்தும்.
இதைப்பற்றி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?
ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, “விமான குறுக்கீடு சார்ந்த எந்த சிக்கல்களும் இல்லாமல் சுமார் 40 நாடுகளில் சி பேண்ட் 5ஜி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வெரிசோன் மற்றும் ஏடி&டி வாதிட்டுள்ளன.
குறுக்கீடுகள் சார்ந்த அபாயங்களைக் குறைப்பதற்காக, பிரான்சில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே, அமெரிக்காவில் உள்ள 50 விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பஃப்ர் ஸ்ஸோன்களுக்கும் (buffer zones) அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
5ஜி குறுக்கீடு என்பது ஏன் அமெரிக்க வான்வெளியில் ஒரு பிரச்சினையாக உள்ளது?
2019-இல் ஐரோப்பிய ஒன்றியம் 3.4 - 3.8 GHz என்கிற வரம்பில் 5ஜி அதிர்வெண்களுக்கான தரநிலைகளை நிர்ணயித்தது, இது அமெரிக்காவில் வெளியிடப்படும் 5ஜி சேவையை விட குறைவான அதிர்வெண் ஆகும்.
ஐரோப்பாவில் ஏலம் விடப்பட்ட அலைவரிசை (Bandwidth) ஆனது குறிப்பிட்ட கூட்டணியின் 27 உறுப்பினர் நாடுகளில் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்பாட்டில் உள்ளது.
31 மாநிலங்களை மேற்பார்வையிடும் ஐரோப்பிய யூனியன் ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சி (EASA), கடந்த டிசம்பர் 17 அன்று இந்த குறிப்பிட்ட சிக்கல் அமெரிக்க வான்வெளியில் மட்டுமே உள்ளது என்று கூறியது.
மேலும் தற்போது வரை ஐரோப்பாவில் இதுபோன்ற ஆபத்து எதுவும் கண்டறியப்படவில்லை," என்றும் குறிப்பிட்டது.